ஜோலார்பேட்டை: இருவேறு இடங்களில் ரயிலில் சிக்கி முதியவர், வாலிபர் பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காவனூர்- லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் கே.வி.குப்பம் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இருதினங்களுக்கு முன்பு அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ரயிலில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். அவரை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கே.வி.குப்பம் ரெட்டியார் தெரு பகுதியை சேர்ந்த ஜெயசீலன்(60) என்பதும், இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து பின்னர் வீட்டில் இருந்து வந்ததாகவும் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் இவருக்கு கீதா என்ற மனைவியும், பிரபு, பாலு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி மதுரை மற்றும் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சிவானந்தன் மகன் அரிகரன்(27). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கும், முகுந்தராயபுரம் ரயில் நிலையத்துக்கும் இடையில் தண்டவாளத்தை அரிகரன் கடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.