Monday, June 17, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பை தொடர்ந்து செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை பயோடெக் நிறுவன அதிகாரிகள் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பை தொடர்ந்து செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை பயோடெக் நிறுவன அதிகாரிகள் ஆய்வு

by kannappan

சென்னை: செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள தடுப்பூசி மையத்தை பாரத் பயோ டெக் நிறுவன அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் ஆய்வு நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு மூலம், எச்பிஎல் நிறுவனம் மிகப்பெரிய உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, தேசிய முக்கியத்துவ திட்டம் என்று ஒப்புதல் அளித்தது.  நமது நாட்டின் தடுப்பூசி தேவையில் 75% எச்பிஎல் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளப்படும். மீதமுள்ள தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் என ஒப்பந்தம் உள்ளது. இதனைத் தொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கண்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகமானதால், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க, மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 25ம் தேதி திருமணியில் உள்ள தடுப்பூசி மையத்தை அதிகாரிகளுடன் சென்று ஒரு மணி நேரம் ஆய்வு முற்கொண்டார். பின்பு தடுப்பூசி மையத்தின் செயல்பாடுகள் அதன் முக்கியத்துவம் உற்பத்தி ஆகியவை குறித்து தமிழக இன்டஸ்டிரியல் இயக்குனர் மற்றும் தடுப்பூசி மைய இயக்குனர் விஜயன், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். பின்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே எடுத்து நடத்தும். இல்லையென்றால், மத்திய, மாநில அரசு உதவியுடன் எச்.எல்.எல் கம்பெனியில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும்  திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லிக்கு சென்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தடுப்பூசி மையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் பாரத் பயோ டெக் நிறுவன அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து திருமணி தடுப்பூசிகள் மையத்தை தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், இந்துஸ்தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை இயக்குநர் சுசித்ரா, செயல் இயக்குனர் சாய்பிரசாத் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் எச் எல் எல் தடுப்பூசி கம்பெனியில் 8 மணி நேரம் ஆய்வு  மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘மாநில அரசின் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொண்டோம். தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பது குறித்து ஆய்வு நடத்தினோம். இதுகுறித்து விரிவான அறிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுப்போம். அதன் பின்பு தடுப்பூசிகள் தயாரிப்புகள் குறித்து அரசு முடிவெடுக்கும்’’ என தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

five + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi