தாராபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவையொட்டி தாராபுரம் ஒன்றிய திமுக சின்னக்கம்பாளையம் பேரூர் கழக திமுக மற்றும் சலாம்பாளையம் சின்னமலை குரூப்ஸ் சார்பில் 14ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நேற்று தாராபுரத்தை அடுத்த சோமனூரில் இருந்து மண்டலபுதூர் செல்லும் சாலையில் நடைபெற்றது. இப்போட்டியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, தாராபுரம், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டி ஜாக்கிகளும் கலந்து கொண்டனர்.
200 மற்றும் 300 மீட்டர்களுக்கு இடையே நடைபெற்ற பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் முதல் மூன்று பரிசுகளாக தங்க நாணயங்களும் அடுத்தடுத்த பரிசுகள் ஆறுதல் பரிசுகளாக வெற்றி கோப்பைகளும் வெண்கல பதக்கங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய தலைவருமான செந்தில் குமார், கோவை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ரேக்ளா சங்க தலைவருமான பிரகாஷ், சின்னக்கம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.