தர்மபுரி, ஜூலை 23: தொப்பூரில் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன் ஆகியோர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை 24ம் தேதி(திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு, தர்மபுரி மாவட்டம் தொப்பூருக்கு வருகிறார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு முகாமை துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல் நடத்தும் பகுதியில், முதல்வர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் அங்கயே முகாமிட்டு, பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். வாகனங்கள் நிறுத்தும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, நிர்வாகிகள் தங்கமணி, சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் மல்லமுத்து, வைகுந்தம், கிருஷ்ணன், சக்திவேல், மாது, சரவணன், இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பெரியண்ணன், தொப்பூர் தனபால், தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் கவுதம், ஆதாம், ஈஸ்வர், விளையாட்டு பிரிவு ரவி, ஸ்பீடு சரவணன், இளைஞரணி செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.