விகேபுரம்: முண்டந்துறை புலி காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது. இதையடுத்து பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி தற்காலிகமாக மூடப்படுகிறது. இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் தெரிந்து ெகாள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திறுக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குருங்கு, செந்தாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குள் மற்றும் மூலிகை தாவரங்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்தாண்டு அம்பை கோட்டத்திற்குட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் நாளை (பிப்.20ம் தேதி) முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கி பிப்.27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு வன சோதனை சாவடி தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.