தஞ்சாவூர்,பிப்.5: தஞ்சாவூரில் இசை மற்றும் நாட்டிய பாரம்பரிய நடைபயணம் திருவையாறு அரசு இசைக்கல்லூரி முன்னாள் முதல்வர் கவுசல்யா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பாரம்பரிய நடைபயணம் மேலவீதி தஞ்சாவூர் நால்வர் இல்லத்தில் தொடங்கி விட்டல் மந்திர் அரண்மனை ஆலோசகர் வாழ்ந்த இல்லம், அய்யன் குளம், பங்காரு காமாட்சி அம்மன் கோவில், ஷியாமா சாஸ்திரி இல்லம் வழியாக வடக்கு வாசல் நாடிராவ் மற்றும் ராஜரத்தினம் இல்லத்தில் நேற்று நிறைவு பெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர் காலம் முதல் இன்று வரை இசை மற்றும் நாட்டியத்தின் வளர்ச்சி குறித்தும், தமிழிசை, கர்நாடக இசை, பரதநாட்டியம், பாகவத மேளம், மேடை நாடகங்கள், கிராமிய இசை மற்றும் நாட்டியத்தில் உலக அரங்கில் தஞ்சாவூரின் பங்களிப்பு குறித்தும் முனைவர் இராம. கவுசல்யா விரிவாக எடுத்துக் கூறினார். சந்திரசேகரன் கிட்டப்பாபிள்ளை குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வும், காமாட்சி பத்மநாபனின் வீணை இசையும் இந்த நடை பயணத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்திருந்தார். வரும் 10ம்தேதி (சனிக்கிழமை) அன்று தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் மாலை 6.30 மணிக்கு வரலாற்று ஆய்வாளர் ஜெயக்குமார் பரத்வாஜ் கலையும் கலாச்சாரம் என்ற தலைப்பில் பாரம்பரிய சொற்பொழிவு நடத்த உள்ளார்.