மதுரை, செப். 28: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், புரட்டாசி மாத நவராத்திரி விழா வரும் அக்.15ம் தேதி தொடங்கி அக்.23ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கொலு மண்டபத்தில் மீனாட்சி அம்மன் தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளுவார். மேலும், சிவபெருமான் திருவிளையாடல்களை விளக்கும் வண்ணம் கொலு மண்டபத்தில் 21 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை நேரத்தில் மூலஸ்தானத்தில் அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் தேங்காய் உடைத்தல், அர்ச்சனை போன்றவை நடத்தப்படாது. இதற்கு மாற்றாக கொலு மண்டபத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு அர்ச்சனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.