Thursday, May 16, 2024
Home » மீண்டும் அரசியலில் குதிப்பேனா?… நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

மீண்டும் அரசியலில் குதிப்பேனா?… நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

by kannappan

சென்னை: மீண்டும் அரசியலில் குதிப்பேனா என்பது குறித்து நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி அளித்தார். சுராஜ் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘நாய்சேகர்’ என்ற புதுப்படம் சம்பந்தமான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. சில வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளதால், அரங்கத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது மேடையில் வடிவேலு பேசியதாவது: நான் சந்திச்ச மாதிரி துன்பத்தை வேற யாருமே சந்திச்சிருக்க முடியாது. எல்லாரும் என்னை வைகைப்புயல், வைகைப்புயல்னு சொல்றாங்க. என் வாழ்க்கைக்கு இடையில் பெரிய சூறாவளி புயலே அடிச்சிருச்சு. ஒரு நோயாளி டாக்டர் கிட்ட போய், ‘அய்யா, எனக்கு மனசே சரியில்ல. நிம்மதி இல்ல. தூக்கமே வரல. எனக்கு ஏதாவது மருந்து கொடுங்க’ன்னு கேட்டான். அதுக்கு அந்த டாக்டர், ‘இன்னைக்கி சனிக்கிழமை. நாளைக்கி ஞாயித்துக்கிழமை. நீங்க திங்கட்கிழமை வாங்க. உங்களுக்கு உதவி பண்றேன்’னு சொன்னார். ‘இல்லைங்க. உண்மையிலயே எனக்கு மனசு சரியில்ல. தூக்கமே வரமாட்டேங்குது. ரொம்ப முடியல. என்னை நீங்கதான் காப்பாத்தணும். ஏதாச்சும் உதவி பண்ணுங்க’ன்னு நோயாளி மறுபடியும் கேட்டிருக்கார். ‘நீங்க திங்கட்கிழமை வாங்க’ன்னு டாக்டர் சொன்னதை நோயாளி கேட்கவே இல்ல. உடனே டாக்டர், ‘பக்கத்தில் சர்க்கஸ் நடக்குது. ஒரு பபூன் பிரமாதமா காமெடி பண்றான். நானும், மனைவியும் போக டிக்கெட் வாங்கி இருக்கோம். என் மனைவியோட டிக்கெட்டை உன்கிட்ட தர்றேன். நீங்களும், நானும் போய் அந்த சர்க்கஸை பார்ப்போம். அந்த பபூன் காமெடியை பார்த்தா, மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கிடும். அதுக்கு பிறகு சரியாயிடுவீங்க’ன்னு டாக்டர் சொல்லியிருக்கார். உடனே நோயாளி, ‘அந்த பபூனே நான்தான்யா’ன்னு சொல்லியிருக்கான். கிட்டத்தட்ட அந்த அளவுலதான் நான் வாழ்ந்தேன். கொரோனாங்கிற பிரச்னை உலகளவுல எல்லாரையும் பயமுறுத்தி, அச்சுறுத்தி மிரள வெச்சிட்டது. அந்தமாதிரி நேரத்துல என் காமெடி ஒரு மருந்தா இருந்ததை எனக்கு கிடைச்ச புண்ணியமா பாக்குறேன்.  இனிமே என் பயணம் கண்டிப்பா நகைச்சுவை பயணமா இருக்கும். முதல்வர் ஸ்டாலின் அய்யாவுக்கு இந்த நேரத்துல என் மனமார்ந்த வணக்கத்தை தெரிவிச்சுக்கிறேன். அவரை நான் என்னைக்கி போய் பார்த்தேனோ, அன்னைக்கி முதல் என் வாழ்க்கை வெளிச்சமா மாறிட்டது. இனிமே எல்லாமே நல்லாதாவே நடக்கும்னு நினைக்கிறேன். ‘நாய்சேகர்’ படத்துல எனக்கு ஜோடி கிடையாது. ஆனா, ஒரு முன்னணி ஹீரோயின் நடிப்பார். நான் ஒரு பாட்டு பாடறேன். பத்து வருஷமா நான் நடிக்கல. காரணம், நான் கால் வெச்ச இடத்துல எல்லாம் கண்ணிவெடி வெச்சிருந்தாங்க. எப்படியோ நான் தப்பிச்சிட்ேடன். நடிப்புல எனக்கு எண்டே கிடையாது. பத்து வருஷத்துல அஞ்சாறு படத்துல நடிச்சேன். இனி ஷங்கர் இருக்கிற பக்கமே போக மாட்டேன். அவர் டைரக்‌ஷன்லயும் நடிக்க மாட்டேன். இனிமே ஹிஸ்டாரிக்கல் படம் பண்ண மாட்டேன். மறுபடியும் அரசியலுக்கு வருவேனான்னு கேட்கறீங்க. அரசியலுக்கு பதிலா சினிமா படங்கள்ல நிறைய நடிப்போம். மக்கள் இப்ப, ‘நீங்க நடிங்க வடிவேலு’ன்னு சொல்லிட்டாங்க. அதனால் அது வேண்டாம். எதிர்காலத்துல என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.  தமிழக முதல்வரை சந்திச்சப்ப, என்னை பார்த்தவுடனே அவர், ‘சீக்கிரம் படங்களில் நடிங்க வடிவேலு’ன்னு சொன்னார். ‘கண்டிப்பா உங்க ஆசீர்வாதம் இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லண்ணே’ன்னு சொன்னேன். பிறகு என் குடும்பத்தை பற்றி அவர் விசாரிச்சார். முதல்வரை பார்த்ததுல இருந்தே எனக்கு நல்ல காலம் பொறந்துடுச்சி. எனக்கு மட்டும் இல்ல, தமிழக மக்களுக்கும் நல்ல காலம் பொறந்திருக்கு. திமுக ஆட்சியில் எல்லாரும் சந்தோஷமா, நிம்மதியா இருக்காங்க. மக்களுக்கு நிறைய நல்லது பண்றாங்க. தயாரிப்பாளர் சங்கம் என்கிட்ட பேசி, ‘உங்களுக்கு ரெட் கார்டே போடல. ரெட் அப்படின்னு சொன்னது பொய். வாய்மொழியில்தான் உங்களை நடிக்க விடாம பண்ணியிருக்காங்க. நீங்க வாங்க, பிரச்னையை பேசி முடிச்சிடுவோம்’னு சொன்னாங்க. பிறகு சுபாஷ்கரன் வந்து பிரச்னையை முடிச்சிட்டார். மறுபடியும் நடிக்க வந்திருக்கிற எனக்கு நிறைய போன் வருது. எல்லாமே நல்ல கதைகளா இருக்கு. லாரன்ஸ், அர்ஜூன், சிவகார்த்திகேயன் உள்பட நிறையபேர் பேசினாங்க. இப்ப ரெண்டு படங்கள்ல மட்டும் கதையின் நாயகனா நடிச்சிட்டு, அப்புறம் ஃபுல்லா காமெடி பண்ண போறேன்.  இவ்வாறு வடிவேலு பேசினார்.  தமிழ்க்குமரன், சுராஜ் உடனிருந்தனர். பிறகு வடிவேலு, ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ என்ற பாடலை பாடினார். ‘வந்துட்டான்யா வந்துட்டான்’ என்ற வசனத்தையும் பேசினார்.பத்து வருஷமா நான் நடிக்கல. காரணம், நான் கால் வெச்ச இடத்துல எல்லாம் கண்ணிவெடி வெச்சிருந்தாங்க. எப்படியோ நான் தப்பிச்சிட்ேடன்….

You may also like

Leave a Comment

12 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi