கோவை, ஜன.28: கோவை அவினாசி ரோட்டில் அதிகளவு வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக கோல்டு வின்ஸ், சின்னியம்பாளையம், நீலம்பூர், அரசூர், கணியூர், தென்னம்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அதிகமாக இயங்கி வருகிறது. இந்த பகுதியில் மெயின் ரோட்டில் பெரும்பாலான தெரு மின் விளக்குகள் எரியாமல் இருக்கிறது. இருட்டாக கிடக்கும் பகுதியில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.
இருட்டான பகுதியில் அதிக வேகத்தில் இரவு நேரத்தில் செல்லும் கனரக வாகனங்கள், கார்கள் ரோட்டில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களின் மீது மோதி விடுவதாக தெரிகிறது. இரவில் இந்த வழியாக ரோட்டை கடக்க மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழியாக நடந்த பெரும்பாலான விபத்துக்களுக்கு மின் விளக்கு எரியாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னியம்பாளையம் பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பிரதான மெயின் ரோட்டிலும், இணையாக உள்ள ரோட்டிலும் தெரு விளக்குகள் எரிவதில்லை. சில மர்ம நபர்கள் இருட்டான பகுதியில் சுற்றுகிறார்கள். பெண்கள் திருட்டு பயத்தில் இரவு நேரத்தில் செல்ல பயப்படுகின்றனர். பெரிய ரோடாக இருந்தாலும் திருட்டு நடந்தாலும், விபத்து நடந்தாலும் கண்டு கொள்ள ஆளில்லாத நிலைமை இருக்கின்றனர். மெயின் ரோட்டில் தெரு விளக்கு கம்பங்களையும், மின் பல்புகளையும் முறையாக பராமரித்து எரிய வைக்க வேண்டும். போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி நடத்த வேண்டும். சமூக விரோத கும்பல்களை கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.