ஈரோடு, மே 21: காற்றும் மற்றும் மழை பாதிப்புகளால் ஏற்படும் மின்விபத்துகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது.
தவிர, வீடுகளுக்கான மின் இணைப்புகளிலும் பழுதுகள் ஏற்படுகின்றன. எனவே, மின் கம்பங்கள் விழுந்தாலோ, மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ அல்லது மின் வினியோகம் தடைபட்டிருந்தாலோ மின் வாரியம் தொடர்பான தகவலுக்கு பொதுமக்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதன்படி, புகார் அளிக்க ‘மின்னகம்” எண் – 94987 94987 ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், புகார்களை புகைப்படத்துடன் சேர்த்து அனுப்பிட வாட்ஸப் எண் 9445851912 ஐ பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.