சென்னை: மின் கட்டணங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மின் பயன்பாடு கட்டணம் தவிர பிற கட்டணங்களுக்கு 18% பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிவுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின் துண்டிப்புக் கட்டணம் என பலவகையான கட்டணங்களை வசூலித்து வருகிறது.இதில் எந்த கட்டணத்திற்கும் இதுவரை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இதற்கு 18% பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுவதாகவும், 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு வந்ததலிருந்து இதுநாள் வரை வசூலிக்கப்படாதவர்களிடமிருந்தும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நுகர்வோர் சந்தேகம் எழுப்பினால் தெளிவுபடுத்த மின்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, ஒமிக்ரான் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் இவ்வேளையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு இரட்டிப்பு அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே முதல்வர் இப்பிரச்சனையில் உடனே தலையிட்டு மின் கட்டணங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….