சிவகங்கை, மார்ச் 12: சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 6 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்க அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் போஸ் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் ஜேசுராஜ், பொன் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலர் உமாநாத் தொடக்கி வைத்து பேசினார்.
சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலர் விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். பின்னர் முத்தரப்பு ஒப்பந்தம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 92 ஆயிரம் பேரின் வாழ்வாதாரங்களையும் உரிமைகளையும் தட்டிப்பறிப்பதைக் கைவிட வேண்டும். ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியத்தை மின்சார வாரியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டால் தமிழக அரசு அதை வழங்கும் என்ற உத்தரவாதத்தை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் குற்றாலிங்கம், உடையான், ராமு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.