தா.பழூர்: மிகவும் பழமை வாய்ந்த அய்யனார் சிலையை பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் அரியலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பண்டைய சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பெரிய திருக்கோணம் கிராமத்திலிருந்து வீ.கைகாட்டி செல்லும் பாதையில் சாலையின் அருகே உள்ள ஒரு வேப்ப மரத்தின் கீழ் இருந்த மிகவும் பழமையான கற்சிலையை ஆய்வு செய்தனர்.