துபாய்: டி20 உலக கோப்பையை வென்ற முதல் ஆஸ்திரேலிய அணி நாங்கள்தான் என்பதில் மிகுந்த பெருமை அடைகிறோம். இது மிகப் பெரிய சாதனை வெற்றி என்று கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலக கோப்பை பைனலில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி 85 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.இந்த சாதனை வெற்றி குறித்து ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது: இந்த வெற்றி மிகப் பெரிய சாதனை. டி20 உலக கோப்பையை வென்ற முதல் ஆஸ்திரேலிய அணி நாங்கள் தான். அதற்காக பெருமைப்படுகிறோம். தனிப்பட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தாலும், குழுவாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும் இதை சாதித்து இருக்கிறோம். சில வாரங்களுக்கு முன்பாக வார்னரை… அவ்வளவுதான் அவரது கதை முடிந்தது என்று கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார். இது போன்ற நேரங்களில் தான் அவர் தனது சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துகிறார். வெளுத்து வாங்கினார். என்னைப் பொறுத்தவரை இந்த தொடரின் சிறந்த வீரர் ஆடம் ஸம்பாதான். அற்புதமாகப் பந்துவீசி ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். முக்கியமான தருணங்களில் பெரிய விக்கெட்களை சாய்த்தார். அதேபோல் மிட்சல் மார்ஷ் அற்புதமாக ஆட்டத்தை தொடங்கினார். மேத்யூ வேடு, ஸ்டாய்னிஸ் சிறப்பாக பங்களித்தனர். இவ்வாறு பிஞ்ச் கூறினார். மிட்செல் மார்ஷ் பைனலின் சிறந்த வீரர் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னர் தட்டிச் சென்றார்….
மிகப்பெரிய சாதனை வெற்றி… பிஞ்ச் பெருமிதம்
previous post