புதுக்கோட்டை, ஏப்.26: புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரனூர் அருகேயுள்ள உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடுவதில் மாவட்டக் கல்வி அலுவலர் தாமதம் செய்வதாகக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெயராம் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சுரேஷ், மாநில துணை பொதுச் செயலர். குமரேசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கிடப்பில் போடப்பட்டுள்ள கோப்புகளை விரைவில் ஒப்புதல் அளித்து ஆசிரியர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஆசிரியர் விரோதப் போக்கில் நடந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்து சென்றார்.
ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ் வரவில்லை என்பதால் போராட்டத்தை ஆசிரியர்கள் தொடர்ந்தனர். அலுவலகத்தின் உள்ளே ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.