அறந்தாங்கி, மார்ச் 23: நாடாளுமன்ற பொது தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறந்தாங்கி அருகே நாகுடி கடைவீதியிலிருந்து அறந்தாங்கி நகராட்சி பகுதி வரையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 40-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணி நடைபெற்றது. பேரணி இராமநாதபுரம்நாடாளுமன்றதொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
பேரணியில் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்துவோம், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். வாக்குகளை விற்பனை செய்ய வேண்டாம். என விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பேரணி நாகுடி கடை வீதியில் தொடங்கி சீனமங்கலம் மேல்மங்கலம், வெட்டிவயல் பெருங்காடு, மேலப்பட்டு வைரிவயல் கிராமங்கள் வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வந்து அறந்தாங்கி நகராட்சியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிறைவு பெற்றது.
கல்லூரியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் கல்லூரி மாணவர்களுடன் அனைவரும் தேர்தல் வாக்குறுதி உறுதிமொழி ஏற்றனர். இந்த பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, சிலட்டூர் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மதியழகன், சுமந்தா, பிரகதீஸ்வரன் கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ராஜா, கார்த்திகேயன், ரமேஷ், புவனேஸ்வரி, வெண்ணிலா, மோகன், பிரபாகரன், கோபி ராஜ், அழகு பாண்டியன், மகேஸ்வரி, பழனியம்மாள், துரைமுருகன், யோகராஜ் , கோபிநாத் தனசிங், உதயகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.