Saturday, May 18, 2024
Home » மாவட்டத்தில் முன்மாதிரியான பங்களிப்புடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தனிநபர், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது: ஏப். 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்டத்தில் முன்மாதிரியான பங்களிப்புடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தனிநபர், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது: ஏப். 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

by Karthik Yash

திருவள்ளூர், ஜன. 5: திருவள்ளூர் மாவட்டத்தில் முன்மாதிரியான பங்களிப்புடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தனிபர்கள், அமைப்புகளுக்கு வழங்கப்படும் 2023 – 2024 ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது பெற ஏப்ரல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த 3.9.2021 அன்று, 2021 – 2022 நிதி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முன்மாதிரியான பங்களிப்பு அளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருதும், தலா ₹1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி பின்வரும் தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுரிகள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், அரசு சாரா அமைப்புகளுக்கு 2023 – 2024 ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, கால நிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, இதர சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் முன்மாதிரியான பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்து www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திலும் அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் 10ம் தேதி பிரதம மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் தகவல்
திருவள்ளூர், ஜன. 5: திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய கூட்ட அரங்கில் வரும் 10ம் தேதி புதன்கிழமை பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தகுதியுடைய ஐடிஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் என்ஏசி சான்றிதழ் பெற்று பயனடையலாம். மேலும் இச்சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், சுயமாக தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவியும் கிடைக்கும். தொழிற்பழகுநர் பயிற்சியின்போது அரசு விதிகளுக்கு உட்பட்டு உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள திருவள்ளூரில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 8778452515 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தொழிற்பழகுநர் முகாமில், கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

4 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi