சென்னை: தமிழக சமூக நலத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவர்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.சமூக பாதுகாப்பு இயக்குனரின் பரிந்துரையில், மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். இயக்குனரின் அறிக்கையை பரிசீலித்த அரசு, அதனை ஏற்று பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில் காணப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் உடல் திறன் இழத்தல், மற்றும் தேறுதல் போன்ற சிரமங்கள், மாற்று கருவறை மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க ஏதுவாக தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 270 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது….