திண்டுக்கல், மே 4: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர் பகத்சிங், பொருளாளர் காளீஸ்வரி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் வில்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் வசதி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதனால் பல்வேறு பணிகளுக்கு கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதள வசதி, மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் செல்ல முன்னுரிமை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.