திருச்சி, மார்ச் 2: திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து தெருமுனை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் தெருமுனை பிரசார நிகழ்வுகள் மற்றும் அரசு திட்ட விளக்க விழிப்புணர்வு நடைபெற உள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று திருச்சி மாவட்டத்தில் திருச்சி உறையூர் காவல்நிலைய பேருந்து நிறுத்தத்தம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று டிவிஎஸ் டோல்கேட் பேருந்து நிலையத்திலும், திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலும், நெ.1 டோல்கேட் பேருந்து நிலையத்திலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது. முன்னதாக இந்த தெருமுனை பிரசார வாகனத்தை திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திட்ட உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.