மார்த்தாண்டம், ஜூலை 20 : வள்ளியூர் அருகே உள்ள இளந்தோட்டத்து விளையை சேர்ந்தவர் பிரவின்(25). லாரி டிரைவர். இவர் சிராயன்குழியில் இருந்து இரவிபுதூர்கடை ரோட்டில் லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரை ஓட்டி வந்த நபர் திடீரென்று டாரஸ் லாரியை முந்தி சென்று வழிமறித்து நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கிய 3 பேர் லாரி டிரைவரான பிரவினை வம்புக்கு இழுத்ததாக தெரிகிறது. மேலும் திடீரென்று லாரியின் உள்ளே ஏறினர். அங்கு பிரவின் வைத்திருந்த ரூ.33 ஆயிரம் ரொக்கப்பணத்தை அபேஸ் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரவின் இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் லாரி டிரைவரிடம் பணம் பறித்தது திக்குறிச்சியை சேர்ந்த நிஜோ, கிருஷ்ணன், மெர்லின் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.