நெல்லை, மே 22: நெல்லை அருகே குடும்ப பிரச்னையில் மாயமான பெண் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ெநல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜகுணசீலன்(47). லாரி டிரைவர். இவரது மனைவி வள்ளிநாயகி என்ற ஜெயராணி(44). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி குடும்ப தகராறு காரணமாக வள்ளிநாயகி தான் அணிந்திருந்த தாலிசெயின் உள்ளிட்டவற்றை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பின்னர் அவரை காணவில்லை. இது குறித்து ராஜகுணசீலன் அளித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோபாலசமுத்திரம் கொம்பையா கோவில் அருகேயுள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் வள்ளிநாயகி உடல் மிதந்துள்ளது. தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்பு துறையினர் உதவியுடன் வள்ளிநாயகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான பெண் சடலமாக கிணற்றில் மீட்பு
previous post