மாமல்லபுரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் கண்ணுபிள்ளை. இவரது, மகன் குருமூர்த்தி (47). இவர், உடுமலைபேட்டையில் டிராபிக் எஸ்ஐ யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் சாலை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். பதவி, உயர்வுக்காக பணி ஆணை வாங்குவதற்காக தனக்கு சொந்தமான காரில் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மனைவியின் தம்பியோடு சென்று, இசிஆர் சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். காரை, அவரே ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் இசிஆர் சாலையில், புலிக்குகை அருகே வந்தபோது, திடீரென மாடு குறுக்கிட்டது. மாட்டின், மீது மோதாமல் இருக்க இடது புறம் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு கல்லில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டி வந்த டிராபிக் எஸ்ஐ குருமூர்த்தி இடிபாடுகளுக்குள் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது, மனைவியின் தம்பி மணிகண்டன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த எஸ்ஐயின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பதவி, உயர்வு பெற்று பணி ஆணை வாங்கி வீடு திரும்பி கொண்டிருந்த டிராபிக் எஸ்ஐ கார் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….