தண்டையார்பேட்டை: புளியந்தோப்பு பகுதியில் மாந்திரீகம் செய்வதாக கூறி தாய், மகள் முகத்தில் மயக்க தண்ணீர் தெளித்து 6 பவுன் நகையை அபேஸ் செய்து தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு நேரு நகர் 4வது தெருவை சேர்ந்தவர் அன்வர்பாஷா. வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். மனைவி தௌலத் (46). இவர்களுக்கு ஆசிபா என்ற மகள் உள்ளார். நேற்று அன்வர்பாஷா, வௌியே சென்று விட்டார். தௌலத்தும், ஆசிபாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், மந்திரம் ஓதியபடியும் மேளம் அடித்தபடியும் தௌலத் வீட்டு வாசல் முன் நின்று கொண்டு பணம் கேட்டுள்ளார். இதனால் மகளிடம் 10 ரூபாய் கொடுத்து கொடுக்கும்படி தௌலத் கூறியுள்ளார். ஆசிபாவும் பணத்தை கொடுக்க முயன்றபோது, அந்த நபர், அவரது தலையில் கை வைத்து, ‘உங்கள் மகளுக்கு நேரம் சரியில்லை’ என கூறியுள்ளார். இதனால் பயந்துபோன தௌலத், அந்த நபரிடம் மேலும் விசாரித்துள்ளார். இதையடுத்து, தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். உடனே தௌலத்தும் வீட்டுக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி, மாந்திரீகம் ஓதி தௌலத் மீதும், அவரது மகள் மீது தெளித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். மயக்கம் தெளிந்து சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது ஆசிபா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின், 2 பவுன் வளையல், 1 பவுன் மோதிரம் என 6 பவுன் நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்தனர். உடனே கணவருக்கு தௌலத் தெரிவித்தார். இதையடுத்து, புளியந்தோப்பு போலீசில் அன்வர்பாஷா புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாந்திரீகம் என்ற பெயரில் நகையை அபேஸ் செய்து தப்பிய ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….