மேலூர், ஏப்.16: மேலூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாநில அளவிலான செஸ் போட்டிகள், மதுரை உத்தங்குடியில் உள்ள டிகாத்லான் குளோபல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இதில் 9 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மேலூர் அருகில் உள்ள அ.செட்டியார்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி வேதாஸ்ரீ 11 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். இதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவி யாகஸ்ரீ 9 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. செஸ் போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவிகளை அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்த இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார், அ.வல்லாளபட்டி சேர்மன் குமரன், கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.