Sunday, May 19, 2024
Home » மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் வார்டு மேம்பாட்டு நிதி ₹50 லட்சமாக உயர்வு: உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்று மேயர் பிரியா தகவல்

மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் வார்டு மேம்பாட்டு நிதி ₹50 லட்சமாக உயர்வு: உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்று மேயர் பிரியா தகவல்

by Karthik Yash

சென்னை, பிப்.23: சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதி ₹50 லட்சமாக உயர்த்தப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்நது. இந்த விவாதத்தில் 34 கவுன்சிலர்கள் பேசினர். பட்ஜெட் கூட்ட விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது: நிலைக்குழு தலைவர் (நகரமைப்பு) இளைய அருணா: தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தது போல மாநகராட்சி பட்ஜெட்டும் அமைந்துள்ளது. மேயர் மேம்பாட்டு நிதி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் மாமன்ற உறுப்பினர்கள் நிதி உயர்த்தப்பட்டது போதாது, உறுப்பினர் நிதியும் 50 சதவீதம் உயர்த்த வேண்டும். மும்பை மாநகராட்சியில் உள்ளது போல கொசுப்புழு உற்பத்தியை தடுக்க மீன்கள் வளர்க்கும் திட்டதை செயல்படுத்த வேண்டும். சாலைகளில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் சென்னையின் அழகு கெட்டு போகிறது. அந்த வாகனங்களை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியாளர், தொழில்முனைவோர், மருத்துவர்கள், எதிர்க்கட்சியனர் என அனைவரும் பாராட்டும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு: இந்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்தாலும் தமிழக மக்களுக்கு நாங்கள் சேவையாற்றுவோம் என்ற நிலையில் தமிழக முதல்வர் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்தார். முதல்வரின் இரு கண்களில் ஒரு கண் சென்னை மாநகராட்சி, கல்வி 27, சுகாதாரம் 19 அறிவிப்புகள் வெளியிட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது சென்னை பள்ளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சென்னை பள்ளிகள் தரத்தில் முதலிடத்தில் இருந்தது. அதன் பின் வந்த எதிர்கட்சியனர் அதை தொடராமல் தரத்தை குறைத்து விட்டனர். ஊழியர் பற்றக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டலக்குழு தலைவர் தனியரசு: இந்தியாவில் உள்ள மற்ற மாநகராட்சிக்கு எடுத்துக்காட்டாக சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் அமைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் வருவாய் இழப்பு இருந்த நிலையில் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் அவை சரி செய்யப்பட்டு ₹850 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தான் ஆணையர், பொறியாளராக இருந்தார். அவருக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் நிதி 45 லட்சத்திலிருந்து அடுத்த ஆண்டு 75 லட்சமாக வழங்க வேண்டும். கத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 10 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்திவாக்கம் அருகே பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதிகள் இருப்பதால் அதிகளவில் மக்கள் வருகின்றனர். அதனால் 50 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். திருவொற்றியார் பட்டினத்தார் மார்க்கெட்டை தரம் உயர்த்த வேண்டும்.

மண்டலக்குழு தலைவர் ராஜன்: பட்ஜெட்டில் அனைத்தும் சிறப்பான திட்டங்களாக உள்ளது. மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ₹3 கோடி போதாது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ₹3கோடி வழங்கப்படுகிறது. சென்னையில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே மேயர் தான் இருக்கிறார், அதனால் மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ₹30 கோடியாக உயர்த்த வேண்டும். 6 நிலைக்குழு தலைவர்களுக்கு இனோவா கார். 15 மண்டல குழு உறுப்பினர்களுக்கு பொலீரோ கார் என 21 தலைவர்களுக்கு கார் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம்: பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளது. மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதி கடந்த ஆண்டை விட கூடுதலாக ₹5 லட்சம் ஒதுக்கி ₹45 லட்சம் ஒதுக்கப்பட்டுளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுக்க சொல்லி நாங்கள் கேட்கவில்லை அதில் 50 சதவீதம் ₹20 லட்சம் கூடுதலாக வழங்கி ₹60லட்சமாக உயர்த்த வேண்டும். சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்.

மேயர் பிரியா: பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் பலரும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதி உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டூள்ளீர்கள், அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதி ₹50 லட்சமாக உயர்த்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதேபோல மண்டலக்குழு தலைவர்கள் சரிதா, சாந்தகுமாரி, நந்தகோபால், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், துரைராஜ், ஜெயின், திமுக கவுன்சிலர்கள் மதியழகன், ஷர்மிளா காந்தி, ராணி, பவித்ரா, பிருந்தா, விசிக கவுன்சிலர் கோபிநாத், மதிமுக கவுன்சிலர் ஜீவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசினர்.

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi