கோவை, செப். 26: ஜெர்மன் நாட்டின் ஹில்டிஷைம் நகரில் வருகிற செப்டம்பர் 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் ஜெர்மன் மற்றும் ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை கருத்தரங்கு நடக்கிறது. இதில், பங்கேற்க கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஜெர்மன் செல்கிறார். ஏற்கனவே, கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மனியில் உள்ள எஸ்லிங்கன் நகருக்கும் இடையே கடந்த 2016ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இரு நகரங்களும் கலாச்சாரம், தொழில்நுட்பம், அறிவியல் உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு குறித்து பரஸ்பர பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜெர்மனி நாட்டில் ஹில்டிஷைம் நகரில் நடைபெறும் ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை கருத்தரங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வருகிற செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை ஜெர்மனியில் தங்கியிருக்க கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப்பிற்கு, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.