செய்யாறு, ஏப்.6: செய்யாறு அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐடிஐ மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஐடிஐ படிக்கும் 17 வயது மாணவர். இவர், மாணவி பள்ளிக்கு செல்லும்போது பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், கையை பிடித்து இழுத்தும், சைகை காட்டியும் தொந்தரவு செய்து வந்தாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் அந்த மாணவனை எச்சரித்துள்ளனர். ஆனாலும், அந்த மாணவன் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஐடிஐ மாணவனை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வருகிறார்.