பாலக்காடு, ஜூன்16: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடிக்கு சிறப்பு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அரசு போக்குவரத்துக்கழக கிளை பணிமனையிலிருந்து ஆனைக்கட்டி சிறப்பு பஸ் இயக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் திறந்து விட்டன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போக்குவரத்துக்கு வசதியாக இந்த பஸ் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மன்னார்க்காட்டிலிருந்து காலை 7.20க்கு புறப்படுகிற பஸ் ஆனைக்கட்டியில் 9.40 க்கு சென்றடைகிறது.
இந்த பஸ் மறுமார்க்கமாக ஆனைக்கட்டியிலிருந்து 10.10க்கு புறப்பட்டு மதியம் 12.30க்கு மன்னார்க்காடு வந்தடைகிறது. இரண்டாவது சர்வீஸ் மன்னார்க்காட்டிலிருந்து மதியம் 2.20 க்கு புறப்பட்டு கோட்டைத்தரை வரையிலும், அங்கிருந்து மாலை 4.30 க்கு புறப்பட்டு மாலை 6.40க்கு மன்னார்க்காடு வந்தடைகிறது. மன்னார்க்காட்டிலிருந்து புறப்படுகிற பஸ் ஆனைமூழி, தாவளம், அகழி, கோட்டத்தரா, சோளையூர் மற்றும் ஆனைக்கட்டி வரையில் சென்று திரும்புகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காகவும், தொழிலாளர்கள் வசதிக்காகவும் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.