நாமக்கல், ஆக.7: மதுரை மாவட்டம், பேராவூரணியை சேர்ந்தவர் அய்யனார் (27). இவர் நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். சேலம் ரோட்டில் ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில், வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து தனது அறைக்கு வந்த அய்யனார் மது குடித்துள்ளார். பின்னர் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் தங்கியுள்ள கட்டிடத்தில் 2வது மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த அவர், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தவறி கீழே விழுந்து விட்டார். இது குறித்த தகவலறிந்த போலீசார், அங்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அய்யனாரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.