கம்பம், ஜூலை 29: திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் அஹமத், புவனேஸ்வரன், மதன்குமார், விக்னேஷ் மணிகுமார், ஷாய்வர்ஷன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கம்பம் வட்டார பகுதிகளில் தங்கி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு நகர்புற மற்றும் கிராமப்புற பெண்களுக்கு மாடித்தோட்டம் நன்மைகள் பற்றி எடுத்துரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராணா, தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் மற்றும் உதவி அலுவலர்கள் மோகன்ராஜ், பால்முருகன், சுதாகர், விவேகானந்தன் உதவியுடன், குழு ஆலோசகர் டாக்டர் பாண்டியராஜ் மற்றும் பாட ஆசிரியர் விஜயகுமார் தலைமையில் மாடித்தோட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்முறை பற்றி எடுத்துரைத்தனர். மேலும், மாடித்தோட்டம் அமைக்கும் ‘கிட்’ குறித்தும் எடுத்துக்கூறினர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், மானிய விலையில் மாடித்தோட்டம் அமைக்க கிட் வாங்க விரும்புவோர் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில், தங்கள் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும், தேவையான காய்கறி தொகுப்புகளையும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.