தொண்டாமுத்தூர்,அக்.15: புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு புராதன நகரமான பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே அமைந்துள்ள காஞ்சிமா நதி என அழைக்கப்படும் நொய்யல் ஆற்றின் கரையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் திதி காரியங்களை நொய்யல் ஆற்றின் கரையில் கொடுப்பதற்காக அமாவாசை தினத்தில் பொதுமக்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். ஆரம்பத்தில் குறைந்த அளவே இருந்த கூட்டம் நேரம் செல்லச்செல்ல அதிகமானது. முன்னோர்களுக்கு திதி பிண்டம் கொடுத்து தர்ப்பணம் செய்ய பேரூர் நொய்யல் ஆற்றங்கரை பிராமண புரோகிதர் சங்கம் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரில் காணப்பட்டது. ஓட்டல், பேக்கரி மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிமாக இருந்தது.முன்னோர்களுக்கு விருப்பமான தின்பண்டங்கள் மற்றும் வடை பாயாசத்துடன் படையலிட்டு காக்கைக்கு வைத்தனர். பின்னர் அவர்கள் தம் குடும்பத்தாருடன் உணவு அருந்தினர். நொய்யல் ஆறு தண்ணீர் இன்றி வறண்டதால் பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தலைவர் அண்ணாதுரை, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோரது ஏற்பாட்டில் திதி கொடுக்க வரும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக ஷவர் வசதி ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.
மஹாளய அமாவாசை பேரூரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
previous post