காரிமங்கலம், செப்.5: காரிமங்கலத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அடுத்த சப்பாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மனைவி சிவகாமி(45). இவர் காரிமங்கலம்- மொரப்பூர் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் குடும்பத்தினருடன் தேர்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், சிவகாமி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றுள்ளார். நேற்று மதியம், திருப்பதியில் இருந்து வந்த சிவகாமி வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ₹10,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.