துவரங்குறிச்சி, செப்.5: மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமராவடி ஊராட்சியில் குமராவடியிலிருந்து ஆனாங்கரைப்பட்டி வரை செல்லும் சாலை சீரமைப்பு பணி ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதனால்அப்பகுதியில் பேருந்து வராததால் இளங்காகுறிச்சி மற்றும் வையம்பட்டி செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் சேர்ந்து குமாரவாடி அருகே பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக வையம்பட்டி காவல் ஆய்வாளர் பிரபு சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். உடனடியாக குமராவடியில் இருந்து ஆனாங்கரைப்பட்டி வரை செல்லும் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.