பெரியகுளம், செப்.5: தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு நெல் விலை ஏற்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அருகே உள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், பொம்மி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 20ம் தேதி முதல் அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது.இந்நிலையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதில் விலை ஏற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை உள்ள கால கட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி ஆன நிலையில், இன்று வரை நெல் கொள்முதல் செய்வதற்கான விலை ஏற்ற அறிவிப்பை அரசு அறிவிக்காததால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து விலை ஏற்ற அறிவிப்பை அரசு எப்பொழுது அறிவிக்கும் என விவசாயிகள் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். தற்பொழுது கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொட்டி வைக்கப்பட்ட நெல் சேதமடையும் சூழல் உருவாகியுள்ளதால், நாள் தோறும் நெல்லை வேறு இடத்தில் மாற்றி மாற்றி கொட்டி வைத்து உலர்த்தி விலை ஏற்றத்திற்காக காத்திருப்பதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.எனவே தமிழக அரசு உடனடியாக நெல் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.