சிவகங்கை, டிச.20: காரைக்குடி மானகிரியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கிருஷ்ணவேணி(55). இவரது மகள் எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பான எம்டி படிப்பதற்கு டெல்லி கல்லூரியில் இடம் இருப்பதாக கூறி இவரது செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதை நம்பிய அவர் மெசேஜ் வந்த செல் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். டெல்லி சென்று மெசேஜ் அனுப்பிய நபரை விசாரித்துள்ளார்.
பின்னர் கடந்த அக்டோபரில் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.15லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நபர் கூறியது பொய்யான தகவல் என தெரிந்து ரூ.15லட்சம் பணத்தை திருப்பி கேட்டவுடன் ரூ.5லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். ரூ.10லட்சத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணவேணி சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் பீகார் மாநிலத்தை சேர்ந்த அமித்துபே(22) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.