Wednesday, May 15, 2024
Home » மருத்துவ தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 3ம் இடம் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்: அரசுப்பள்ளி மாணவன் பேட்டி

மருத்துவ தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 3ம் இடம் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்: அரசுப்பள்ளி மாணவன் பேட்டி

by Ranjith

 

சென்னை: போரூர் அடுத்த பரணி புத்தூர், நோவா நகர், எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர், மாங்காடு பிரதான சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி. தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் முருகன் (17). மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று மொத்தம் 534 மதிப்பெண் பெற்றார். இதனைக் கண்ட அவரது பள்ளி ஆசியர்கள் மற்றும் பெற்றோர் நீட் தேர்வு எழுதுமாறு அவரை உற்சாகப்படுத்தினர். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய போது, அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 264 மட்டுமே.

எனினும் மனம் தளராமல் தகுந்த பயிற்சி பெற்று, மீண்டும் இந்த ஆண்டு 2வது முறையாக நீட் தேர்வு எழுதினார். தற்போது, அவர் 560 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், மாணவன் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது தாய், தந்தை பழ வியாபாரம் செய்து, என்னை படிக்க வைத்தனர். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மவுலிவாக்கம் அரசுப் பள்ளியில் படித்தேன். தற்போது அரசின் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு எழுதுவதற்காக முறையான பயிற்சி பெற்று தொடர்ந்து கடுமையாக படித்தேன். அதனால், தற்போது 560 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்த பயம் தற்போதும் உள்ளது. ஆனால், மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, சரியான திட்டமிட்டு படிப்பதன் மூலம் நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். அதிக மதிப்பெண்களையும் பெற முடியும். எனது இந்த வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்து என்னை ஊக்கமும், உற்சாகமும் படுத்திய எனது பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், எனது உடன் பிறந்தோர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்‌. இதன் மூலம் நான் எளிதாக அரசின் சலுகைகளுடன் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்து பட்டம் பெற்று, ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதே எனது வாழ்நாள் லட்சியம்,’’ என்றார்.

You may also like

Leave a Comment

17 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi