திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 3 நாளில் தொற்று சதவீதம் 10.2 ஆக குறைந்து உள்ளது. எனவே பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு நிபந்தனைகளில் தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களில் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. உள்ளரங்குகளில் நடக்கும் டிவி தொடர் படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும். நோய் பரவல் குறைவாக உள்ள இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை திறப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டதால் ஜூலை 1 முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும். இதேபோல் அனைத்து கல்லூரிகளையும் திறப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அதற்கு முன்பாக கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழக எல்லையில் உள்ள மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்….