சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு திருப்பணிகள் ேமற்கொள்ளப்பட்டபோது, புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை, ராகு, கேது சிலைகள் இடம் மாற்றப்பட்டன. இதில் மயில் சிலை மாயமானது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான மயில் சிலை கோயில் தெப்பக்குளத்தில் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 14ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 5 நாட்கள் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கோயில் தெப்பக்குளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலை இருக்க வாய்ப்பு உள்ளது என தேசிய கடல்சார் ஆராய்ச்சி மைய அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மோகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் 25 பேர், ஸ்கூபா டைவிங் தெரிந்த 7 மீனவர்கள் அதிநவீன கருவிகள் உதவியுடன் நேற்று காலை முதல் 7.15 மணி முதல் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சிலையை தேடினர். ஆனால், சிலை கிடைக்காத நிலையில், மாலை 5.30 மணிக்கு முடித்து கொண்டு திரும்பி சென்றனர். இந்த நிலையில் இன்று மீண்டும் சிலை தேடும் பணி தொடரும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்….