மயிலாடுதுறை,ஜூன்16: மயிலாடுதுறை மாவட்டத்தில் கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் பெற்று இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பெருக்கி கொள்ள உதவிடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ-சேவை மையம் உரிமம் பெற்று இயக்குவதற்கு வழங்கப்படவுள்ளது. அரசு விதிகளின் படி மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும். குறைந்த பட்சம் 2 mbps அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய தள இணைப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.
படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.