மயிலாடுதுறை, ஏப். 7: மயிலாடுதுறை சித்தர்காட்டில் மிக பழமையான அங்காளம்மன் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு,மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். மயிலாடுதுறையை அடுத்துள்ளது சித்தர்காடு. இங்கு மிக பழமையான அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிசேகத்தை முன்னிட்டு,புனித நீர் அடங்கிய குடங்களை வைத்து யாகசாலை அமைக்கப்பட்டு நான்கு கால பூஜைகள் சிவாச்சாரியார்களை கொண்டு நடைபெற்றது. அதனை ஒட்டி யாகசாலையில் பூர்ணாஹூதி நடைபெற்று புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.