மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதமானது.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மின்சார வாரிய துணை மின்நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீர் ஏற்பட்ட தீ விபத்தில் 10 மெகாவாட் பவர் டிரான்ஸ்பார்மர் பயங்கர வெடி சப்தத்துடன் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இரவு பணி ஊழியர்கள், உதவி செயற்பொறியாளருக்கு தகவல் கொடுத்தனர். உதவி செயற்பொறியாளர் காசிலிங்கம், மணல்மேடு மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க போராடி தீயை அணைத்தனர். பின்னர் மயிலாடுதுறை மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார், சீர்காழி செயற் பொறியாளர் லதாமகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த துணை மின் நிலையத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து திருச்சி, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் இருந்து மின்பராமரிப்பு சிறப்பு குழுவினரால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு காலை 10 மணியளவில் டிரான்ஸ்பார்மர் சீர் செய்யப்பட்டது….