சென்னை: திருவள்ளூர் தகனிகோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா(24). இவர் திருவள்ளூர் பகுதியில் பூமாலை கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், ராஜா திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ரம்யா(20) என்பவரை கடந்த 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதியருக்கு குழந்தை இல்லை. குடிப்பழக்கம் கொண்ட ராஜா தினமும் குடித்துவிட்டு வந்து தன் மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து ரம்யா தன் கணவரை விட்டு பிரிந்து தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா தன் மாமியார் வீட்டிற்கு சென்று தன் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்புமாறு கேட்டார். அதற்கு ரம்யா தன் கணவருடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். இதனால் மன விரக்தியில் இருந்த ராஜா நேற்று முன்தினம் தன் வீட்டிற்கு வந்து, `என் மனைவி என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை. என் மனைவிதான் எனக்கு உலகம். அவளே என்னை வேண்டாம் என்று கூறிவிட்ட பிறகு நான் வாழ விரும்பவில்லை. நான் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன். என் மரணத்திற்கு யாரும் சம்பந்தமில்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்படி இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, தொழிலாளி ராஜா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரது சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்….