நெல்லை, பிப். 18: நெல்லை மேலப்பாளையம் ஹாமீம்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது கைப். சிவில் இன்ஜினியரான இவர் மனையினை வரன்முறைப்படுத்த விண்ணப்பித்துள்ளார். இதற்காக சென்னையிலுள்ள நகர் ஊரமைப்பு அலுவலகம், நெல்லை உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் பாளை, பஞ்சாயத்து யூனியன் பிடிஓ ஆகிய 3 பேருக்கும் சேர்த்து ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்துள்ளார். ஆனால் விண்ணப்பித்து 9 மாதங்கள் கடந்த நிலையில் மனையை வரைமுறைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதற்காக பலமுறை நேரில் சென்றும் சரியான முறையில் பதில் தெரிவிக்கவில்லை பலமுறை அலைக்கழிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான முகமது கைப், நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வக்கீல் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து இந்த வழக்கு மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் பிறவிப் பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் முகம்மதுகைப்பிற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும். இதனை சென்னை நகர் ஊரமைப்பு ஆணையாளர், நெல்லை உள்ளூர் திட்டக் குழும செயலாளர், பாளை. பிடிஓ ஆகியோர் சேர்ந்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.