பேராவூரணி, மே 5: மதநல்லிணக்கத்தின்படி, காவடி எடுத்துவந்த பக்தர்களுக்கு தண்ணீர் கொடுத்து இஸ்லாமிய இளைஞர்கள் வரவேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் திருவிழா 12 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் பல்வேறு காவடிகள் எடுத்து வந்தனர்.
காவடி எடுத்து வந்தவர்கள் மற்றும் துணைக்கு வந்த பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் பேராவூரணியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் பள்ளிவாசல் முன் வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைத்து, தண்ணீர் பந்தல் அமைத்து அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து வரவேற்றனர். இஸ்லாமியர்களின் வரவேற்பை காவடி எடுத்துவந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். இஸ்லாமிய இளைஞர்களின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.