மதுரை, மார்ச் 23: மதுரையில் வாகன தணிக்கையின்போது சிக்கிய ரூ.18 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலான நிலையில், மதுரை மாவட்டத்தில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை விமானநிலையம் அருகே பெருங்குடி சந்திப்பு பகுதியில் கடந்த 18ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் 3 பெட்டிகளில் ரூ.18 கோடி மதிப்பிலான 29.70 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்துள்ளது.இதற்கான ஆவணங்களை பறக்கும் படையினர் கேட்டுள்ளனர், ஆனால், வாகனத்தில் இருந்தவரிடம் முறையான ஆவணங்கள் முழுமையாக இல்லை. இதையடுத்து ரூ.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தெற்கு சார்நிலை கருவூலத்தின் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்ந தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு உரிய ஆவணங்கள் சம்பந்தபட்டோர் தரப்பில் இருந்து நேற்று காலை வரை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், விதிப்படி கருவூலத்தில் இருந்த நகைகளை பறக்கும் படையினர் நேற்று மதுரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.