மதுரை, ஜன. 30: மதுரை மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் எதிர்ப் பகுதியில் உள்ள ஐகோர்ட் வழக்கறிஞர்கள் குடியிருப்பு மற்றும் பிரஸ் காலனிக்கான பிரதான சாலையில் கடந்த 3 மாதங்களாக சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் பெண்கள் கல்லூரி, எம்எல்ஏ, அலுவலகம், போக்குவரத்து பணிமனை, வனத்துறை அலுவலகம், வடக்கு போக்குவரத்து அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தனியார் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ அடக்கஸ்தலங்களும் இப்பகுதியில் இருக்கிறது.
நாள்தோறும் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அருகே வசிக்ககூடிய நீதிமன்ற குடியிருப்பு வழக்கறிஞர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாணவ- மாணவியர் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் கழிவுநீர் ஓடும் இடத்தில் கீழே விழுந்து எழும் நிலை உள்ளது. மேலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடுமையான தூர்நாற்றம் வீசி, கொசுக்களும் பெருகி வருகிறது. தொடர்ந்து 3 மாதமாக கழிவுநீர் ஆறாக ஓடி வரும் நிலையில் இதனை மாநகராட்சி சிறப்பு நடவடிக்கையாக சரிசெய்ய வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.