மதுரை, டிச. 3: மதுரை மாவட்டத்தில் பருவமழை காலம், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் தொற்று மற்றும் டெங்கு பாதிப்பு மக்களுக்கு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து சுகாதார துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை முகாம் மற்றும் ெடங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதித்தவர்கள் முகாம் மூலம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இதில் காய்ச்சலுக்கு 82 குழந்தைகள், 102 பெரியவர்கள் என மொத்தம் 184 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சை அளிக்கப்பட்டது. டெங்கு பாதித்து 7 குழந்தைகள், 35 பெரியவர்கள் என மொத்தம் 42 பேருக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் டெங்குக்கென சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.