மதுரை, பிப். 6: மதுரை காந்தி மியூசியத்தில் புதிய காட்சி கூடம் திறக்கப்பட்டது. மதுரை காந்தி மியூசியத்தில் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக இந்திய விடுதலை இயக்கம் மற்றும் மகாத்மா காந்தியடிகள் குறித்த காட்சி கூடம், வினோபா ஜோதி அரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக காட்சி கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இக்காட்சி கூடத்தை காந்தி மியூசியத்தின் துணை தலைவர் ஜவஹர்பாபு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தியாகி அழகம்பெருமாள், காந்தி மியூசியத்தின் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ், பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், காப்பாட்சியர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மற்றும் உள்- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.