மதுரை, ஆக. 8: தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகரும், மதுரையை சேர்ந்தவருமான டிஎம்எஸ் என அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜன் மறைந்தார். அவரது 100வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு அவரது பெயரை தமிழக அரசு அண்மையில் சூட்டியது. மேலும் மதுரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதன்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் டிஎம்எஸ்ஸின் வெண்கல சிலை ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தொடங்கிய சிலை அமைக்கும் பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசின் முதன்மை செயலர் சந்திரமோகன் நேற்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் வரும் நிலையில், இச்சிலையின் திறப்பு விழா வரும் 17ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.